சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு திமுக சார்பில் 15 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்களை மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கன மழையிலும்-நிலச்சரிவிலும் சிக்கி பேரிடருக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக நிர்வாகிகளும் - தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வேண்டிய பல்வேறு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்திட வேண்டும்” என திமுக நிர்வாகிகளுக்கும்-தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நேற்று ₹15 லட்சம் மதிப்பிலான 1,500 மூட்டை அரிசி அடங்கிய மூன்று லாரி நிவாரணப் பொருட்களை கடும் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொடியசைத்து அனுப்பி வைத்தார். அத்துடன் சென்னை மேற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி முன்னாள் செயலாளர் சம்பந்தம் மைத்துனர் ஏழுமலை அளித்த 100 மூட்டை அரிசியையும் அனுப்பி வைத்தார்.