இஸ்லாமபாத்: ‘‘அணு ஆயுதக் கொள்கை பற்றி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து துரதிர்ஷ்டவசமானது, பொறுப்பற்றது’’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அவர் அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரானில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அதன்பின் அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், `‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஆனால், எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலையை பொறுத்தது’’ என கருத்து தெரிவித்திருந்தார்.