புதுடெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் நேற்று மாலை 5.00 மணிக்கு தீப்பிடித்ததாக தீயணைப்பு துறைக்கு தகவல் கூறப்பட்டது. அதையடுத்து தீயணைப்பு சாதனங்களுடன் வீரர்கள் அங்கு விரைந்தனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்தது. இதனிடையே, கொழுந்து விட்டு எரிந்த தீ, உடனடியாக 2வது மாடிக்கும் பரவியது. மளமளவென எரிந்த தீயில் இருந்து எழும்பிய கரும்புகை, எய்ம்ஸ் வளாகத்தை சூழ்ந்தது. தீப்பிடித்த பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.