திம்பு : அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பின், முதல் முறையாக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று பூடான் சென்றார். அங்கு அவரை பரோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் வரவேற்றார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து தலைநகர் திம்புவிற்கு புறப்பட்டு சென்றார்.
இந்த பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக அவர், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் உடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் நீர் மின் உற்பத்தி துறையில் இந்தியா - பூடான் இடையிலான 50 ஆண்டு கால உறவை விளக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டார். இஸ்ரோ அமைத்துள்ள ஆய்வுக் கூடத்தையும் திறந்து வைத்தார்.