திருமலை: கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் என விஆர்ஓ நோட்டீஸ் வழங்கினார். ஆந்திர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையை ஒட்டி உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சைலம், நாகார்ஜுன சாகர் அணைகள் நிரம்பி விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.