திருவனந்தபுரம்: கேரளாவின் கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பள்ளிவாசலில் இடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஸ் ஸ்டாண்டில் தொழுகை நடந்தது. கேரளாவில் பெய்த கோர மழைக்கு மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 59 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து காணப்பட்டதால் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது இயலாத காரியமாக இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை நடத்த அதன் நிர்வாகிகள் அனுமதி அளித்தனர். பள்ளிவாசல் அருகில் உள்ள அரபி பாடசாலையின் மேஜை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்றொரு பகுதியில் தொழுகை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த என்ன செய்வது என தெரியாமல் நிர்வாகிகள் திகைத்தனர். பின்னர் அப்பகுதியினருடன் கலந்து பேசி போத்துகல் பஸ் நிலையத்தில் வைத்து தொழுகை நடத்த தீர்மானிக்கப்பட்டது.