வர்தா: ‘‘இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம் முக்கிய சவாலாக உள்ளது. ஆனால் இதை எதிர்க்கொள்ளும் வகையில் பல திட்டங்களை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் நேற்று நடந்த பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் நம் நாட்டில் உள்ளனர். உலகளவில் உள்ள நோய்களிலும் 20 சதவீதம் இங்குதான் உள்ளது. தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்கள், புதிய நோய்கள் என மூன்று விதமான சவால்களை நாம் எதிர்க்கொள்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம் முக்கிய பகுதியாக உள்ளது. போதிய சுகாதார வசதிகள் கிடைக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, வெப்ப மண்டல நோய்கள் போன்றவை சவால்களாக உள்ளன. இவற்றை எதிர்கொள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் உட்பட இதர சுகாதார திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நமது பிரச்னைகள் சிக்கலானது. இவை சமூக பொருளாதார சவால்களுடன் பின்னி பிணைந்துள்ளன.