சென்னை: நாட்டிலேயே பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் சென்னை 2ம் இடத்தில் உள்ள நிலையில் பிளாஸ்டிக் குப்ைப உருவாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன செய்யப்பபோகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை ஒரு மாநில அரசால் அமல்படுத்த முடியாது, இது மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டம் என்று பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த திட்டம் 25 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வெற்றி பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள், விற்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.