வேலூர்: வேலூர், அரக்கோணத்தில் வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் புகுந்ததால், கால்வாய்களை தூர்வாரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடியற்காலை வரை கன மழை பெய்தது. இதில் வேலூர் மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை மற்றும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மாங்காய் மண்டி எதிரே உள்ள நிக்கல்சன் கால்வாயை தூர் வாராமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று காலை மாங்காய் மண்டி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.