தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது : கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தையும் பிரிக்கும் எண்ணம் உள்ளது’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபியில் நடந்த விழாவில், இருசக்கர வாகனம் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்கணினியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாட திட்டத்தில் க்யூ-ஆர் கோடை ஸ்கேன் செய்யும்போது ஆடியோவும் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரமாக்க பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்தவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பு நடத்த வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் வழங்குவதாக உறுதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதுகுறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.

2 ஆயிரம் வார்த்தை கொண்ட ஆங்கில பெட்டகம் ஒரு மாதத்தில் வழங்கப்படும். இது, மென்பொருள்,  ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்போது, எவ்வித தவறும் நடக்காது. இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக ஒரே முறையில்தான் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் இது வரை தேர்வு முறையை மாற்றி இருந்தோம். பாலிடெக்னிக் தேர்வில் ஓ.எம்.ஆர். தாளில் முறைகேடு நடந்ததை கண்டுபிடித்த பிறகுதான் தற்போது ஆன்லைன் மூலமாக தேர்வு கொண்டு வந்துள்ளோம். இனி இதில் சிறிய தவறுகூட நடக்காது. இதில் தேர்வு முடிந்த பிறகு உடனே பதிவிறக்கம் செய்தாலே தேர்வு எழுதுபவர்கள் பெற்ற மதிப்பெண்ணை அறிந்து கொள்ள முடியும்.

 ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் கூறி வருகிறார். புதிய கலெக்டர் அலுவலகம் அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவை. நிலத்தை தேர்வு செய்த பின்தான் புதிய மாவட்டம் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தையும் பிரிக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. ஆசிரியர்கள் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது போக்குவரத்து துறை உத்தரவு. அதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: