திசையன்விளை: காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை இறந்து விட்டதாக அவரது தாய், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம், நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்தவர் அஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகள்கள். 2வது மகள் (19), தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசி காதலை வளர்த்து வந்தனர். இதனிடையே மகளின் காதல் விவகாரம் அறிந்த அஞ்சனா, கண்டித்தார். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மாணவி, காதலனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இடையன்குடி சாலையில் உள்ள காதலன் சந்தோஷ் வீட்டில் தஞ்சமடைந்தார். மகளை காணாது பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிய அஞ்சனா, காதலன் சந்தோஷ் வீட்டுக்கு அவர் சென்று விட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்தார். பெத்தெடுத்து ஆளாக்கிய நம் சொல்லை கேட்காமல் காதலனுடன் ஓடிவிட்டாளே’’ என மற்ற இரு மகள்களிடமும் குமுறினார்.