இலங்கையில் இருந்து சென்னைக்கு 19 லட்சம் தங்கம் கடத்திய பெண் கைது

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை கண்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரி (48), சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்தார். இவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். அவர்  அடிக்கடி சுற்றுலா பயணியாக சென்னை வந்தது தெரியவந்தது. அவ்வாறு வரும் அழகேஸ்வரி மறுநாளே இலங்கை செல்வதும் பாஸ்போர்ட் மூலம் தெரியவந்தது.  எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது  உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. ஆனால் அவர், ‘அதுதான் சோதனையை முடித்து விட்டீர்களே.. இனிமேலாவது என்னை வெளியில் அனுப்புங்கள்’ என்றார்.

எனவே, சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பெண் சுங்க அதிகாரிகளை வரவழைத்து அழகேஸ்வரியை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடையில் சிறிய பர்ஸை மறைத்து வைத்திருந்ததை  கண்டுபிடித்தனர். அதில் 5 தங்க செயின்கள் இருந்தன. மொத்த எடை 580 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.19 லட்சம். அதிகாரிகள் தங்க செயின்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில், தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு  திருமண விழாவில் கலந்துகொள்ள வந்ததாகவும், அப்போது போட்டுக்கொள்ள நகைகளை வைத்துள்ளேன் என்றார். பிறகு ஏன் அதை மறைத்து வைத்திருந்தீர்கள் என அதிகாரிகள் கேட்டதற்கு, பாதுகாப்புக்காக மறைத்து வைத்திருப்பதாக  கூறினார். அந்த பெண்ணை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: