நகரமைப்பு அலுவலருக்கு மிரட்டல் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது

ஆவடி:ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு அலுவலர் சுப்புதாய். இவர் நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கு இருவர் வந்தனர். தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை உயர்  அதிகாரியின் டிரைவர் என அறிமுகப்படுத்தினர். பின்னர், இருவரும் சுப்புதாயிடம் உங்கள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கு பணம் தரவேண்டும் என மிரட்டினர்.  இதனையடுத்து அவர் அலுவலக ஊழியர்களை வரவழைத்து இருவரையும் பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம், எழில் நகர் 6வது தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (38), அம்பத்தூர்-  செங்குன்றம் நெடுஞ்சாலை,  விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்த வேலாயுதம் (47) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இருவரும் நில புரோக்கர்கள். இதனையடுத்து, இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: