சேதுபாவாசத்திரம் அருகே தூர்ந்துபோய் குப்பை மேடான ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்தும் துளிர் அமைப்பு: இளைஞர்களின் சமுதாய பணிக்கு பொதுமக்கள் பாராட்டு

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம்  சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த பெரிய ஏரி 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாததால்  நாளுக்கு நாள் ஏரி மைதானம் போலவும் ஊர் மக்கள் குப்பை கொட்டும்  கிடங்காகவும் மாறிக்கொண்டிருந்தது. இதனால்  நீர்வரத்து பாதைகள் அடைக்கப்பட்டதால், பல ஏக்கர் பாசனத்திற்கு, பயன்பட்டு வந்த பெரிய ஏரி தற்போது தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது.

இதை பார்த்து கவலையடைந்த அப்பகுதி இளைஞர்கள் துளிர் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். பெரிய ஏரியை பயன்படுத்தும் முக்கிய பாசனதாரர்களான குருவிக்கரம்பை, முனுமாக்காடு கிராமத்தார்கள், இளைஞர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பெரிய ஏரியை தூர்வார இருக்கிறோம் என தெரிவித்தனர்.  இது தொடர்பாக துளிர் அமைப்பினர் குருவிக்கரம்பையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதையடுத்து குருவிக்கரம்பை கிராம பெரிய ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனங்களை பயன்படுத்தி மண் எடுத்து முதற்கட்டமாக கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள், ஏரியின் வடிகால் வாய்கால்கள்,சாலை ஓரங்களில் உள்ள வாடிகால்களும் தூர்வாரப்படுகிறது.  இப்பணிக்காக அரசை எதிர்பார்த்து காத்திராமல், தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை ஊரே  பாராட்டுகின்றது. குருவிக்கரம்பை இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்தது  கைஃபா கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கம் என்பது குறிப்பிடதக்கது. இதில் குருவிக்கரம்பை துளிர் அமைப்பினரும் கிராம முக்கிய பிரமுகர்களும் முன்னின்று பணிகளை செய்து வருகின்றனர்.

Related Stories: