கீழ்வேளூர்: ஆந்தக்குடி சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வரும் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடியில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் மற்றும் காளியம்மன், சொர்ணபுரீஸ்வரர், காத்தவராயன் மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் உள்ளது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 25ம் தேதி காலை அனுக்ஞை, நவக்கிரக ஹோமம் மற்றும் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை தொடங்குகிறது.
மாலை வாஸ்து சாந்தி, 26ம் தேதி காலை தீர்த்தம் எடுத்தல், மாலை முதல் கால யாக பூஜை, 27ம் தேதி காலை இரண்டாம்கால யாக பூஜை, அதைத் தொடர்ந்து விமான கலசம் அமைத்தலும், இரவு கோ பூஜை, சுவாசினிபூஜை, கன்யாபூஜைகள் நடைபெற்று மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. 28ம் தேதி காலை 4ம் கால யாக பூஜை, 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 11.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தன்று திருவாரூர், கீழ்வேளூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.