திங்கள் முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்: ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.. கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விதிகளை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார். பள்ளி கல்வி துறை அறிவிப்பின் பேரில் இருசக்கர வாகனம் ஓட்டி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பெருகிவரும் சாலை விபத்தில் 14 வயதுக்கும் குறைந்த வயது உள்ளவர்கள் 7% இறக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஹெல்மட் அணிந்து வரவேண்டும். இது மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இதுபோன்று பள்ளி தொடங்குவதற்கு முன் இறைவணக்க கூட்டத்தின்போது சாலைப்போக்குவரத்து விதிகள் குறித்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் விளக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் ஆசிரியருக்கான கட்டாய ஹெல்மெட் உள்ளிட்ட நிபந்தனைகள் வரும் திங்கட்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் விதிகளை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் தமிழ்முரசு நிருபரிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியருக்கான கட்டாய ஹெல்மெட் மற்றும் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்த்தல், பள்ளி முடிந்ததும் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வரும்பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் போக்குவரத்து சரி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு உடனடியாக கடலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை அமல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2,234 அனைத்துவகை பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப் பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் இந்த உத்தரவுக்கு உட்பட்டவர்கள். ஆசிரியர்கள்தான்  மாணவர்களுக்கு முன் உதாரணம் என்ற அடிப்படையில் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதை அனைத்து ஆசிரியர்களும், பள்ளி தலைமை ஆசிரியரும் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் தலைமையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தபடுகிறது. உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது நிபந்தனைகளுக்குட்பட்டு விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று மாணவர்களுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சாலை பாதுகாப்பு மன்றங்கள் உருவாக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. விரைவில் இது தொடர்பாக அனைத்து பள்ளி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே சாலை பாதுகாப்பு தொடர்பான பள்ளிக் கல்வித் துறையின் இந்த உத்தரவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் நலன் கருதி பின்பற்ற வேண்டும் என்றார்.

Related Stories: