குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு 10 நாட்கள் நடக்கும் மாசிக்கொடையை அடுத்து ஆவணி மாதம் நடக்கும் அஸ்வதி பொங்கல் வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் அஸ்வதி பொங்கல் வழிபாடு வரும் 20ம் தேதி மகா சுமங்கலி பூஜையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு பஜனை, 6 மணிக்கு மகா சுமங்கலி பூஜை, 2ம் நாள் காலை 6 மணிக்கு தேவி பாராயணம் மற்றும் பஜனை, 9 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, நண்பகல் 11.30 மணிக்கு அசுவதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிடுகின்றனர்.