கோவை: போலீசார் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு சென்றதால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் அபராதம் வசூலிக்காமல் 20 ஆயிரம் சலான்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில், உப்பிலி பாளையம், லட்சுமி மில், குப்புசாமி நாயுடு நிறுத்தம் உள்ளிட்ட 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவற்றில் போக்குவரத்து விதிமீறல்களான ஹெல்மட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, செல்போனில் பேசி கொண்டு செல்வது போன்றவை படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்கிறது. அதன் அடிப்படையில் சலான் தயார் செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இன்று வரை 21246 சலான்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதால் போலீஸ் பற்றாக்குறையால் இதனை முறையாக பின்பற்றாமல் அபராதம் வசூலிக்க முடியவில்லை.
1215 பேரிடம் மட்டும் ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆயிரத்து 31 சலான்களில் உள்ளவர்களிடம் அபராதம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்திவரதர் பாதுகாப்பு பணி முடிந்து இன்று போலீசார் கோவை வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின் பேரில் 12 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு மீதமுள்ள சலான்களின் விவரத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.