திண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் பகுதியில் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் வரும் செப்.2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது 3 நாட்களுக்கு முன்போ விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு அந்நாளில் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்க கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கஜேந்திரன் கூறியதாவது, ‘விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 14 நாட்களே இருப்பதால் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளதால் விலைக்கு வாங்கி தயார் செய்கிறோம். அதேபோல் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமலும், எளிதில் கரையும் வண்ணம் களிமண், காகித கூழலால் சிலைகள் செய்கிறோம்’ என்றார்.