*மதுரைக்கு வந்தாச்சு ‘ஸ்மார்ட் இ-சலான் இயந்திரம்’
மதுரை : மதுரை நகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறையினரால், ‘ஸ்மார்ட் இ-சலான் இயந்திரம்’ மூலமாக ரசீது வழங்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ஸ்மார்ட் இ-சலான் மூலமாக ரசீது வழங்கப்பட்டு, அதற்கான அபராத ெதாகையை வாகன ஓட்டுனர்கள் எஸ்பிஐ வங்கி, தபால் நிலையம், இ-சேவை மையம், கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். இந்த ஸ்மார்ட் இ-சலானின் முக்கிய நன்மைகள் என்னவென்றால், போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுபவர்களை எளிதில் கண்டறிய முடியும்.
காவல்துறையினர் ஒரு வாகன பதிவு எண்ணை கொண்டு, வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார்? என்பதையும், அந்த வாகனம் திருட்டு வாகனமாக என்பதையும், அந்த வாகனம் ஏதேனும் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டுள்ளதா? என்பதையும் எளிதில் அடையாளம் காண முடியும். இந்த இயந்திரத்தில் வாகன ஓட்டுனர் உரிமத்தில் உள்ள பதிவு எண்ணை பதிவு செய்ததுடன், ஓட்டுனர் உரிமம் உண்மையானது தானா? அல்லது போலியானதா? என்பதையும் எளிதில் கண்டறிய முடியும். ஸ்மார்ட் இ-சலான் இயந்திரம் மூலம் பொருத்தப்படும், ரசீதில் உள்ள குற்ற விவரங்கள் அனைத்தும், இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன், பதிவேற்றம் செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், அதற்கான அபராத தொகையை 3 மாதத்திற்குள் செலுத்த தவறினால், அவரது வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மதுரை நகரில் போக்குவரத்து போலீசாருக்கு 25 இயந்திரங்களும், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு 7 இயந்திரங்கள் என மொத்தம் 32 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.