அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் உற்பத்தி பணி தீவிரம்

*நாள் ஒன்றுக்கு 30 டன் விற்பனை

சேலம் : விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா நெருங்குவதால், ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. வெல்ல மண்டிக்கு டன் கணக்கில் விற்பனை வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில் சேலம் மாவட்டத்தில் தான், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளும் அதிகமுள்ளன. சேலத்துக்கு அடுத்தப்படியாக தர்மபுரி, நாமக்கல்லில் வெல்ல ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஆடி மாதத்தையொட்டி வெல்லம் அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகரித்தது. தொடர்ந்து, வரும் செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தியும், 29ம் தேதி நவராத்திரி விழா ெதாடங்கி, அக்டோபர் 7ம் தேதி ஆயுத பூஜை விழாவும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து சேலத்தைச் ேசர்ந்த வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கருப்பூர், ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆலைகளில், தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதை ஏலம் எடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகின்றனர். ஆடிப்பண்டிகையையொட்டி வெல்லம் விற்பனை நன்கு நடந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதன் காரணமாக, ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளோம். தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம், 60 சதவீதம் பெங்களூருவுக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இவ்வாறு வெல்ல உற்பத்தியாளர்கள் கூறினர்.

Related Stories: