×

கொலை குற்றவாளிகள் விடுதலை புதிய சட்டத்தில் நீதி கிடைக்கும்: பிரியங்கா நம்பிக்கை


புதுடெல்லி: ‘பசுவை கடத்தியதாக ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய சட்டப்படி நீதி கிடைக்கும்,’ என பிரியங்கா நம்பிக்கை தெரிவித்தார்.   ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து ஆல்வார் மாவட்டத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வாகனம் ஒன்றில் பெக்லு கான் (55) என்பவர் பசுக்களை ஏற்றிச் சென்றார். அப்போது,   வழிமறித்த ஒரு கும்பல், அவர் பசுவை கடத்தி செல்வதாக கூறி  தாக்கியது.  இதில்,  பெக்லு கான் பலியானார். இந்த  வழக்கை விசாரித்த ஆல்வார் நீதிமன்றம், கடந்த 14ம் தேதி கானை தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி விடுதலை செய்தது.


இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `பெக்லுகான் கொலை வழக்கில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.  மனித நேயமற்ற செயலுக்கு நமது நாட்டில் இடமளிக்க கூடாது. ஒருவரை கும்பல் அடித்து கொலை செய்வது மிகக்கொடிய குற்றமாகும்,’ என குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில், மனிதர்களை கும்பல் அடித்து கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை ராஜஸ்தான் அரசு இயற்றியுள்ளது. இதை வரவேற்று பிரியங்கா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், `ராஜஸ்தான் அரசு இயற்றியுள்ள புதிய சட்டம் மூலம், பெக்லு கானை கும்பல் அடித்து கொன்ற வழக்கில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்,’ என கூறியுள்ளார்.



Tags : Murder Offenders Release, New Law, Priyanka
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...