புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடால்தே பகுதியில் பாஜ முக்கிய தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஜீக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார்.