கொல்கத்தா: பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட ரோஸ்வேலி வழக்கில் ஆஜராகுமாறு கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் ₹4,000 கோடி நிதி திரட்டி வாடிக்கையாளர்களை மோசடி செய்த சாரதா சிட்பண்ட் வழக்கு மற்றும் ₹15,000 கோடி மோசடி செய்த ரோஸ்வேலி கவர்ச்சி ஊழல் வழக்கு ஆகியவற்றின் விசாரணை குழு தலைவராக இருந்தவர் முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார். இவர் தற்போது சிஐடி ஏடிஜிபி.யாக உள்ளார். இந்த இருவழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, சாரதா சிட்பண்ட் வழக்கு விசாரணையில் தொடர்புடைய தன்னை கைது செய்யக்கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ராஜிவ்குமார் மனுதாக்கல் செய்தார். இதேபோல் ரோஸ்வேலி முறைகேடு வழக்கிலும் தன்னை கைது செய்யக்கூடாது எனவும் மற்றொரு மனுவை அவர் தாக்கல் ெசய்திருந்தார். இந்நிலையில், ரோஸ்வேலி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜிவ் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சாரதா சிட்பண்ட் வழக்கில் சிபிஐ ஏற்கனவே இவரிடம் விசாரணை நடத்தி இருக்கிறது.