சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை காஷ்மீரில் விதித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
05:49 am Aug 17, 2019 |
புதுடெல்லி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள பிழைகளை திருத்தி, புதிய மனு தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவை, இன்டர்நெட் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, டெல்லி மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டார். இதேபோல், காஷ்மீரில் செய்தி சேகரிக்க முடியவில்லை என்று டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் அனுராதா பாசின் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்களோடு சேர்த்து காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக மொத்தம் ஆறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக எம்.எல்.சர்மா மற்றும் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் ஆகஸ்ட் 16ம் தேதி விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எம்.எல்.சர்மா வாதிடுகையில், “காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற ஜனாதிபதியின் ஒப்புதலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,’’ என வாதிட்டார்.
பத்திரிக்கை ஆசிரியர் அனுராதா பாசின் தரப்பு வாதத்தில், “காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்குள்ள நிலைமை குறித்து செய்தி வெளியிட்டால் தான் பிற மக்களுக்கும் காஷ்மீரின் நிலை வெளிப்படையாக தெரியவரும். மேலும், காஷ்மீரில் தொலைத்தொடர்பு சாதனங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதில் முக்கியமாக காஷ்மீர் பகுதிகளில் பத்திரிகைகள் கூட வெளியிட முடியவில்லை என்பது எங்கள் சுதந்திரத்துக்கு எதிரானதாகும்,’’ என வாதிடப்பட்டது.
Tags : Abolition of Special Status, Kashmir, Supreme Court, Central Government