சென்னை: புரோ கபடி 7வது சீசனின் சென்னை கள போட்டிகள் இன்று தொடங்குகின்றன. நேரு உள் விளையாடடரங்கில் நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி மூன்றில் வெற்றி, 2 தோல்வி, ஒரு ‘டை’ என மொத்தம் 20 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூரு புல்ஸ் 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் மொத்தம் 22 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் நடப்பு சீசனில் சம பலத்துடன் தான் உள்ளன. அதிலும் தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாக்கூருடன் புதிதாக ராகுல் சவுத்ரி சபீர் மற்றும் தற்காப்பு ஆட்டக்காரர்கள் மஞ்சித் சில்லர், மோகித் சில்லர், ரன்சிங் ஆகியோர் நல்ல ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் ஷெராவத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஒரே போட்டியில் 29 புள்ளிகள் எடுத்து அசத்தினார். எனவே இன்று நடைபெறும் போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அடுத்த போட்டியில் டெல்லி தபாங் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி இது. டெல்லி முதலிடத்தை தக்க வைக்குமா பெங்கால் முதல் இடத்திற்கு முன்னேறுமா என்பதை முடிவு செய்யும் போட்டியாக இது இருக்கும்.