மும்பை: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரியின் (57 வயது) பதவிக் காலம், இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இடைக்கால பயிற்சியாளராக அவர் நீடித்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், ரவி சாஸ்திரியின் பெயரும் பரிசீலிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்கள், பயிற்சியாளர்கள் பலர் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், மைக் ஹெஸ்ஸான் (நியூசி.), டாம் மூடி (ஆஸி.), பில் சிம்மன்ஸ் (வெ.இண்டீஸ்) ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் சிம்மன்ஸ் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்தனர். ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2021ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வரை இந்த பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.