×

வியாசர்பாடி, மாதவரம் பகுதிகளில் ரயில்வே கான்ட்ராக்டர் உள்பட இருவர் சரமாரி வெட்டிக்கொலை : மர்ம கும்பலுக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடியில் ரயில்வே கான்ட்ராக்டர், மாதவரத்தில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). வியாசர்பாடி பகுதியில் ரயில்வே கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்ட தலைவர். இவரது மனைவி கவுசல்யா (32). தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி கவுசல்யா, அப்பகுதியை சேர்ந்த பிரபல பெண் தாதாவின் மகள் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியில் ஜெயக்குமார் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு மர்ம நபர்கள், திடீரென ஜெயக்குமாரை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். முகம், மார்பு உள்ளிட்ட 8 இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததால் ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.தகவலறிந்து வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஜெயக்குமாரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் விரைந்து வந்து, கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா, அல்லது முன்விரோதம் காரணமா? என 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் தாதாவின் மகளை ஜெயக்குமார் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் இவருக்கும் அந்த தாதாவின் 2 மகன்களுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோத தகராறு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் ஜெயக்குமாரை வெட்டிக் கொன்றனரா எனவும் போலீசார் விசாரித்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்:  செங்குன்றம், சோலையம்மன் நகரை சேர்ந்தவர்  கார்த்திக் என்ற ஊலை கார்த்திக் (24). மாதவரம் ஆர்டிஓ அலுவலகம் அருகில் ஆட்டோ மீட்டர் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பைக்கில் கடைக்கு வந்தார். அங்கு பணியில் ஈடுபட்டபோது, 2 பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள்,  திடீரென கடைக்குள் நுழைந்து, கார்த்திகை அரிவாளால் சரமாரியாக  வெட்டினர். இதில் தலை, வயிறு போன்ற  இடங்களில் பலத்த வெட்டு விழுந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த கார்த்திக், சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து,  அருகில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை  செய்யப்பட்ட கார்த்திக் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை  செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Two persons ,railway contractor, Vyasarpadi, Madhavaram area
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்