சென்னை: அத்திவரதர் வைபவத்தை மிக சிறப்பாக நடத்த அயராது உழைத்திட்ட அனைத்து துறையினருக்கும் முதல்வர் எடப்பாடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள அத்திவரதரின் வைபவம், 1.7.2019 முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று இன்றுடன் நிறைவடையவுள்ளது. தமிழக அரசு விரிவான பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ முகாம்கள், போக்குவரத்து, அன்னதானம், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம், உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக, இந்தியா முழுவதும், வெளிநாடுகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர். இந்து சமய அறநிலைய துறை, வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, பொதுப்பணி, போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிக சிறப்பாக பணியாற்றியதன் விளைவாக, வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை சிறப்பாக தரிசித்து சென்றனர்.