சியோல்: வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக வடகொரியா கோபம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தொடர்ந்து அது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ‘இந்த சோதனை தென்கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை’ எனவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் மட்டும் அவர், 4 முறைக்கு மேல் இந்த சோதனைகளை நடத்தி பீதியை கிளப்பியுள்ளார். இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியது. இது குறித்து தென்கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘காங்வோன் மாகாணத்தில் உள்ள டோங்சன் நகரில் இருந்து ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டன. இவை 230 கிமீ தூரம் சென்று ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்தன,’ என்றனர்.