எல்லையில் துப்பாக்கி சண்டை இந்திய தூதரிடம் பாக். கண்டிப்பு

இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி, இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவை அழைத்து இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், ‘‘எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டியுள்ள லிபா, பாட்டல் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் ஒரு பாகிஸ்தான் வீரர் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்திய ராணுவத்தின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து மீறி வருகிறது.   போர் நிறுத்த ஒப்பந்தத்தை எழுத்து மூலமாகவும், உணர்வு பூர்வமாகவும் இந்திய வீரர்கள் மதித்து செயல்படவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்தியா தனது வீரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடப்பதால் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது,” என்றார்.

Related Stories: