×

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு: 2021 வரை தொடருவார்...பிசிசிஐ ஆலோசனை குழு அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், சமீபத்தில்  இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து அணியில் புதிய பயிற்சியாளராக விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தது.  விண்ணப்பிக்காமலேயே பயிற்சியாளர் தேர்வுக்கு ரவி சாஸ்திரியும் தகுதி பெற்றுள்ளார்.

இந்த விண்ணப்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான டாம் மூடி, இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், தற்போதைய ஜிம்பாப்வே  கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புத் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகிய 6 பேரையும் பிசிசிஐ இறுதி செய்தது.

அவர்கள் 6 பேரிடமும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று நேர்காணல் நடத்தியது. இதற்காக ராபின் சிங் உள்ளிட்டோர்  மும்பை சென்றனர். தற்போது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் உள்ள தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காணொலி காட்சி மூலம் நேர்காணலில் பங்கேற்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 6 பேரிடமும் நேர்காணல்  முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிசிசிஐ ஆலோசனை குழு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். 2021-ம் ஆண்டு வரை  ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடருவார் என கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.  
 
கபில் தேவ் பேட்டி:

கிரிக்கெட் விளையாட்டு பற்றிய அறிவு, திறமை, சாதனை அடிப்படையில் ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பயிற்சியாளரை தேர்வு செய்யும் குழுவில் உள்ள அனைவருமே, ஒருமித்த கருத்துடன் ரவிசாஸ்திரியை தேர்வு செய்துள்ளனர் என்று கபில் தேவ் விளக்கம் அளித்தார். இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம் என்றும் கூறினார். அணியின் தலைமைப் பயிற்சியாளரை தேர்வு செய்வது தொடர்பாக எந்த வீரருடனும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்றும் கபில்தேவ் தெரிவித்தார். டி20 உலகக் கோப்பை தொடரிலும் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் கூறினார்.

கெய்க்வாட் பேட்டி:

அணியின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர், நீண்டகாலம் அணியுடன் இருப்பவர் என்பதால் ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார் என்று கெய்க்வாட் தெரிவித்தார். அணி வீரர்கள் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் ரவிசாஸ்திரி திறமையாக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.


ரவிசாஸ்திரி:

ரவி சாஸ்திரியை பொறுத்தவரை அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 70 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது, 2 ஆசிய கோப்பை  தொடர்களை வென்றது, உலக கோப்பையில் அதிக ரன்களை எடுத்து அசத்தியது என இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

ஆனாலும், தென் ஆப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது, உலக கோப்பையில் அரை இறுதியிலேயே வெளியேறியது மட்டுமே ரவி சாஸ்திரிக்கு பின்னடைவாக இருக்கிறது. மொத்தத்தில் அவரது  பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது. எனவே ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பிசிசிஐ நிர்வாகிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ravi Shastri to be appointed head coach of Indian cricket team BCCI Advisory Committee Announced
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...