சேலம்: கேரளா, தமிழகத்தில் ஏலக்காய் விளைச்சல் குறைந்ததால், கிலோ ரூ.5,500 ஆக விலை உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தமிழகத்தில் தேனி, கம்பம், போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் விவசாயம் நடக்கிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் ஏலக்காயை விவசாயிகள் அறுவடை செய்து இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு கேரளாவில் பெய்த மழையாலும், நடப்பாண்டு பெய்த மழையாலும் அங்கு ஏலக்காய் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதேபோல், தமிழகத்திலும் நடப்பாண்டு ஏலக்காய் விளைச்சல் சரிந்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் வரத்தில் இருந்து 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.