சென்ஷேன்: குற்றவாளிகள் ஒப்படைப்பு திட்டத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் ஆத்திரமடைந்து உள்ள சீனா, ஹாங்காங் எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களை ஆயுதங்களுடன் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காக், சீனாவிடம் கடந்த 1997ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் தனியாக அரசு இருந்தாலும் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஹாங்காங்கில் தஞ்சமடைந்தால், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா கோரி வருகிறது. இதற்காக, ஹாங்காங் நாடாளுமன்றத்தில் குற்றவாளிகள் ஒப்படைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சீனா ஆத்திரம் அடைந்துள்ளது.