பெரம்பூர்: சவுகார்பேட்டையில் பேன்சி கடை நடத்தி வரும் சுவாஜி மல் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு சன்னி ஜெயின் (34) என்பவர், பொருட்கள் வாங்கும் தகராறில் கத்தியால் குத்தியுள்ளார்.இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சன்னி ஜெயினை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், கடந்த 2011ம் ஆண்டு சன்னி ஜெயினுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அப்போது, நிபந்தனை ஜாமீன் பெற்ற அவர், மும்பைக்கு தப்பி ஓடி விட்டார். பூக்கடை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சன்னி ஜெயினை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு சன்னி ஜெயின் எண்ணூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்த போது பூக்கடை போலீசார் அவரை கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த கான்ட்ராக்டர் சண்முகம் (40), நேற்று முன்தினம் இரவு, எண்ணுர் விரைவு சாலையில் பலகை தொட்டி குப்பம் அருகே பைக்கில் சென்றபோது, கன்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த அன்பழகன் (27), நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் மது அருந்தியபோது, அங்கு வந்த அவரது நண்பர் யுவராஜ், முன்விரோத தகராறில் அன்பழகனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமைந்தகரை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீடுகளில் புகுந்து செல்போன் மற்றும் டி.வி லேப்டாப்களை திருடி வந்த அமைந்தகரை திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் மற்றும் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், கடந்த 14ம் தேதி பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து மாயமாகினர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கடற்கரை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மாணவிகளை நேற்று மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பக்கம் கவுசிக் அவென்யூ, 2வது தெருவை சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி (23) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சுதந்திர தினத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பட்டினப்பாக்கம் குடிசை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58), வெங்கடேசன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல், எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் சிலை அருகே 8 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்த நபர்களை தேடி வருகின்றனர்.