×

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 4,500 வீடுகள் கட்ட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளியங்கிரி: அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் , கோவை மாவட்டம், வெள்ளயங்கிரி மலை அடிவார கிராமங்களான  ஆலந்துறை, காளிமங்கலத்தில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகளும், பேரூர் செட்டிபாளையம் கிராமத்தில் 2,500 வீடுகளும், பச்சனவயல் கிராமத்தில் 70 வீடுகளும் என சுமார் 4,500க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மலை பாதுகாப்பு ஆணைய பகுதிக்குள் வனத்துறை, வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அனுமதி இல்லாமல் வீடுகள் கட்டப்படுவதாக கூறி வெள்ளையங்கிரி பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார்,சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் யானை நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் உயிர்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனைகளுடன் வீடுகள் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நகரமைப்புத்துறை, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம்  ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் வீடுகள் கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.மேலும் மலைப்பகுதியில் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட இண்டஸ் கல்லூரியில் இருந்து 100மீ தூரத்தில் இந்த வீடுகள் கட்டப்படுவதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், வீடுகள் கட்டப்படவுள்ள நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதால் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனை ஏற்ற தமிழக அரசு முறையான அனுமதி வரும்வரை வீடுகளை கட்டப்போவதில்லை என உறுதியளித்தது, இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்  18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Velliyangiri Hill, Houses, Buildings, Prohibition, High Court, Order
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...