புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை, மக்களவை தொகுதி எல்லை மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சமீபத்தில் 2 யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்பட்டன. இதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, அக்டோபர் 31ம் தேதி முதல் இந்த 2 யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வருகின்றன. இவற்றில் லடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் கிடையாது. ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே இருக்கும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்டப்பேரவை செயல்படும். இதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, இங்கு சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதல் கட்டமாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆலோசனை நடத்தி இருக்கிறது.