திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகனும், தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஆந்திராவுக்கு துரோகம் செய்கின்றனர் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றம்சாட்டினார்.விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு பேசியதாவது:ஆளும் கட்சியினர் நல்ல முறையில் பணிபுரிந்தால் எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிவோம். வன்முறையை தூண்டும் விதமாக பணிபுரிந்தால் போராட்டம் செய்யவும் தயங்க மாட்டோம். பணியிட மாற்றம் மற்றும் மற்ற தேவைகளுக்காக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் தாக்குதலுக்கு, போலீசார் அவர்கள் பக்கம் இருப்பது சரியானது அல்ல. சபாநாயகர் தனது பதவிக்கு உண்டான கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நல்ல முடிவுகளை எப்பொழுதும் வரவேற்போம். அதன் ஒரு கட்டமாகவே மத்திய அரசு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை வரவேற்றுள்ளோம்.