×

ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு 2வது முறை தண்டனை குறைக்க சட்டத்தில் இடமில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரண்டு முறை தண்டனையை குறைக்க சட்டத்தில் இடமில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். மும்பையில் இருந்து சென்னை நேற்று மாலை 6 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜிவ் காந்தி கொலை வழக்கு விடுவிப்பதை பொறுத்தமட்டில் அது சட்டத்தின் கைகளில் தான் உள்ளது. அரசியல் கட்சிகளில் விருப்பு வெறுப்பு அடிப்படையில் நாங்கள் முடிவு செய்ய முடியாது. சட்டம் என்ன கூறுகிறதோ அதை அனைவரும்  ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதே நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்து இதில் என்னவென்றால் எந்த ஒரு குற்றவாளிக்கு விடுதலையாக இருந்தாலும்  தண்டனையாக இருந்தாலும் நீதி மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.  அதில் அரசியல் கட்சிகளோ  தனிப்பட்ட குழுக்களோ முடிவு செய்ய முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை.  ஒரு குற்றவாளிக்கு  ஒருமுறைதான் தண்டனையை குறைக்க முடியும்.  இரண்டுமுறை தண்டனை குறைக்க சட்டத்தில்  இடம் கிடையாது. அந்த விதத்தில்  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை கைதிகளாக இருந்த அவர்களுக்கு  சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள். இதற்குமேலும்  இரண்டாவது  முறையாக தண்டனை குறைப்பு என்பது அரசியல் சட்டத்தில் இடம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajiv's, murder,, law , KS Alagiri
× RELATED கொரோனா பரவல் எதிரொலி; முத்துப்பேட்டை...