புழல்: சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (49). இவர் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். கடந்த 10ம் தேதி இரவு கம்பெனியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக கிருஷ்ணன் காரில் புறப்பட்டார். புழல் அடுத்த கதிர்வேடு மேம்பாலம் அருகே சென்றபோது மர்ம கும்பல் காரை வழிமடக்கி நிறுத்தி கத்தியை காட்டி கும்மிடிப்பூண்டிக்கு கடத்தி சென்றனர். பின்னர் கிருஷ்ணன் வைத்திருந்த 1.80 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு காருடன் விட்டு சென்றுவிட்டனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் பயன்படுத்திய பைக் எண்ணை வைத்து புழலில் இருந்து 60 கிலோ மீட்டர் வரை உள்ள 150 கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து பைக் எண்ணிற்கு தொடர்புடைய நபரை பற்றி விசாரித்து பணம் பறிப்பில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் செங்குன்றம் அடுத்த மல்லி மாநகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (28), கிரான்ட்லைன் ராஜ்குமார் (27), (இவருடைய தந்தை கங்காதரன், மணலி புது நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது) மற்றும் பொன்னேரி அனுப்பன்பட்டு கந்தன்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் (24), மீஞ்சூர் ராம ரெட்டிபாளையம் பச்சமால் கோயில் தெருவை சேர்ந்தவர் சுமன் (28) ஆகிய 4 பேரும் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.