திருப்பத்தூர் அருகே கணவன் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கணவன் வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் வளர்த்த நாய், சடலத்தின் அருகே படுத்து சடலத்தை எடுக்க விடாமல் தடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்(40). இவரது மனைவி ராதா(34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனசேகர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். அதில், அவர் பல இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் அதிப்பட்டாராம். இதனால், கடன் கொடுத்தவர்கள் அவரிடம் தகராறு செய்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி, மகன் மற்றும் மகளை விட்டுவிட்டு திடீரென மாயமானார்.

கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம், கடனை திருப்பி கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். இதனால், கடந்த சில மாதங்களாக ராதா மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம் நேற்று மீண்டும் வந்து ஆபாசமாக பேசினார்களாம். இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை நீண்ட நேரமாகியும் ராதா வீட்டில் இருந்து வெளியே வராததால் அவரது எதிர் வீட்டில் இருந்தவர் ராதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, உள்ேள ராதா தூக்குப் போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்க சென்றனர். அப்போது, ராதா பாசத்துடன் வளர்த்த நாய் அவர் இறந்து கிடப்பதை பார்த்து சடலத்தின் மீது படுத்து கண்ணீர் வடித்தபடி இருந்தது. மேலும், சடலத்தை எடுக்க சென்ற போலீசாரை பார்த்து குறைத்தது. மேலும் அருகில் சென்றவர்களையும் விரட்டியது. பின்னர், போலீசார் ஒரு வழியாக அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை வளர்த்த எஜமானர் இறந்துவிட்டதை அறிந்த நாய் கண் கலங்கி யாரையும் சடலத்தின் அருகே அனுமதிக்காமல் தடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: