ஹாங்காங்: ஹாங்காங்கில் போலீசாரின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் நேற்று விமான நிலையத்தை முற்றுகையிட்டதால், அது மூடப்பட்டது. இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவழக்குகளில் சிக்குபவர்களை சீனா கொண்டு சென்று விசாரிக்கும் வகையில் ஹாங்காங்கில் சமீபத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள், கடந்த 3 மாதமாக வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்தி வந்தனர். ஜனநாயக சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும், போலீசார் மீது கற்களை வீசுவது, தீயணைக்கும் கருவிகள் மூலம் ஸ்பிரே செய்வது, பெட்ரோல் குண்டுகள் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.