தற்போது விற்பனைக்கு வரும் பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சாதனம் என்பது இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டது. மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் கார் இயக்கம் பற்றிய தகவல்களை ஒருங்கிணைந்து தரும் இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை வசதியுடன் வருவதால் இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது. எனினும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.இதனால், ஆரம்ப மற்றும் நடுத்தர வேரியண்ட்டுகளை வாங்குவோர் தொடுதிரை அல்லாத இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டுமே பெற முடிகிறது. சிலர், வெளியில் வாங்கி பொருத்துகின்றனர். ஆனால், அதில் வாரண்டி உள்ளிட்ட சில பிரச்னை எழுகிறது. இதை, மனதில் வைத்து தவிர்த்து விடுகின்றனர். இதுபோன்று தொடுதிரை இல்லாத இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் கார்களுக்காக சிறப்பு மொபைல் செயலியை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ‘’ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ டாக் ஆப்’’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த செயலியை மொபைல்போனில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், காரில் இருக்கும் இன்போடெயின்மென்ட் டெக் யூனிட்டுடன் இதனை புளூடூத் அல்லது ஆக்ஸ் போர்ட் கேபிள் வழியாக இணைத்துக்கொள்ளலாம்.