வருகிறது மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார் மாடல், மஹிந்திரா பொலிரோதான். கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ விற்பனையில் 12 லட்சத்தையும் தாண்டி அசத்தி வருகிறது. நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த தேர்வாக இது உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுக்கு சர்வதேச ஆட்டோமொட்டிவ் தொழில்நுட்ப மையத்திடமிருந்து (ICAT) பிஎஸ்-6 தரச்சான்று பெறப்பட்டுள்ளது. இதனால், விரைவில் புதிய மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது.புதிய இன்ஜின் பொருத்தப்படுவதுடன், இதில் பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகிறது. ஏர்பேக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான சீட்பெல்ட் வார்னிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் ஆகியவையும் இப்புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும். இதன் உட்புறத்தில் எதிரொலிப்பு இல்லாத ரியர் வியூ மிரர், முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் ஆகியவையும் கொடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் சேர்க்கப்படுகின்றன.

இப்புதிய காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்டான்டர்டு பொலிரோ காரில், 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வழங்கும். வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கும் ஒப்பாக மஹிந்திரா பொலிரோவின் கட்டுமானமும் மேம்படுத்தப்பட இருக்கிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: