திருவண்ணாமலை: ஓதலவாடி ஏரியும், அப்பகுதி செய்யாற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டும் காணாதவாறு அரசு அதிகாரிகள் இருக்கின்றனர் என்று கிராம மக்கள் ேவதனை தெரிவிக்கினறர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைத் தொடரில் உருவாகி கலசபாக்கம், கரையாம்பாடி, கரைப்பூண்டி, மண்டகொளத்தூர், தச்சூர், என பல்வேறு ஊர்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கும் செய்யாறில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக போளூர் பகுதியில் வசூர், நல்லாம்பட்டு, சனிக்கவாடி, கரைப்பூண்டி, மண்ட கொளத்தூர், ஒகூர் ஆகிய பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அரங்கேறிவருகிறது. இதற்காக கூலியாட்களை வைத்து மணலை சலித்து குவியல் குவியலாக குவித்து வைக்கின்றனர்.செய்யாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மணல் கொள்ளையால் போளூர் பகுதிமுழுவதும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.‘இந்நிலையில் மணல் திருட்டு குறித்து புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஓதலவாடி ஊராட்சி பொதுமக்கள் கூறியதாவது: சேத்துப்பட்டு தாலுகா ஓதலவாடி மேட்டுகுடிசை கிராமத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மணல் திருட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் திருட்டு குறித்து நாங்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தால் சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதேபோல், ஓதலவாடி ஊராட்சியில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், இங்கு ஏரி மண் திருட்டும் நடந்து வருகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும், ஏரி மண் எடுப்பதால் விவசாய கிணறுகளில் தண்ணீர் குறைந்து விவசாயம் என்பது கேள்விக்குறியதாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.