×

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திருநெல்வேலியுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திருநெல்வேலியுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். புதிய தென்காசி மாவட்டம் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வருவாய் வட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்கு, தென்காசி மாவட்டம் பயனுள்ளதாக அமைகின்றது. அதே வேளையில், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. இவ்விடங்கள், தென்காசியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

திருநெல்வேலிதான் அருகில் உள்ளது. கல்வி, மருத்துவ தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்கு சென்று வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் போக்குவரத்துத் தொடர்புகள் எளிதாக உள்ளன. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன் கோவிலுக்குக் கூடப் பேருந்துகள் கிடையாது. அப்படியானால் திருவேங்கடம், இளையரசனேந்தல், குருவிகுளம், தேவர்குளம் பகுதி மக்கள் எப்படிப் பயணிக்க முடியும்? எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த 90% மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விருப்பம் கொண்டுள்ளனர். எனவே இந்தப் பகுதிகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கும் வகையில் மாவட்ட பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன், என்று கூறியுள்ளார்.


Tags : Sankarankovil, Tirunelveli, district, MDMK, Vaiko
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு