ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டியில் அ.தி.மு.க ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சந்தேகபடும் 3 நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அ.தி.மு.க. ஆண்டிபட்டி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தவர் சதீஷ்(24) கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு வந்த தேனி மாவட்ட எஸ்பி.பாஸ்கரன், இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேனி மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் சதீஷ் கொலை வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த கிணற்றில் தடயங்கள் எதுவும் உள்ளதா? என்று கண்டறியும் வகையில் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஆய்வு நடத்தினர். ஆனால் கிணற்றில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.