இந்தியை நீக்க கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி பயோ மெட்ரிக் கருவியில் 9 மொழிகள் திடீர் சேர்ப்பு: தமிழுடன் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி இடம் பெற்றுள்ளதால் புதிய சர்ச்சை

வேலூர்: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் சேர்க்கப்பட்டு, இந்தி உட்பட 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவியில் தமிழுக்கு பதில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது என்று  செய்தி வெளியானது. இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் தமிழ் மொழி உட்பட 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, பயோமெட்ரிக் கருவியில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பயோ மெட்ரிக் பதிவின் முகப்பதிவில் மொழி தேர்வு செய்வதற்கான புதிதாக பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், எந்த மொழியை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றனர்.இந்தி புகுத்தப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில், அதை நீக்கிவிட்டு தமிழை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், தமிழுடன் மொத்தம் 9 மொழிகளை பயோமெட்ரிக் கருவியில் சேர்த்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகளில் தமிழும், ஆங்கிலமும் இடம் பெற்றிருந்தால் போதும். தமிழை நீக்கிவிட்டு இந்தியை புகுத்தியதை கண்டித்தால், வேறு மொழிகளையும் சேர்த்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Related Stories: