×

விஏஓவை போலீஸ் மிரட்டும் ஆடியோ வைரல் 20 ஆயிரம் ரூபா தரலன்னா எப்ஐஆர் போட்டுருவோம்...:மதுரை அருகே பரபரப்பு

மதுரை: மதுரை அருகே மறியல் செய்தவர்களிடம் புகாரை வாங்கி வைத்துக் கொண்டு, ‘‘ரூ.20 ஆயிரம் பணம் தந்தால் விட்டு விடுவோம். இல்லையென்றால், புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் போட்டு விடுவோம்’’ என விஏஓவை, போலீஸ் மிரட்டும் ஆடியோ வைரலானது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அத்திபட்டி கிராமத்தில் தனிநபருக்கு, நிலத்தை அளந்து கொடுப்பது தொடர்பான பிரச்னையில் சிலர், கடந்த 9ம் தேதி அத்திபட்டி - சாப்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாப்டூர் போலீசார் சென்று, ‘சாலை மறியலில் ஈடுபடக்கூடாது’ என எச்சரித்தனர். அதே நேரம், சமாதானமாகச் செல்ல இருந்த நபர்களிடம், அப்பகுதி விஏஓ கருப்பையா குறித்து சாப்டூர் போலீசார் ஒரு புகாரைப் பெற்றுள்ளனர். அதன்பின்பு சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை அளந்து கொடுத்ததும் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது. இதனால் மறியலில் ஈடுபட்ட நபர்கள், தங்களிடம் பெற்ற புகாரை வாபஸ் பெற சாப்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். புகாரை திரும்பத் தர மறுத்த போலீசார், ‘உங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து விடுவோம்’ என மிரட்டி திருப்பி  அனுப்பியதாக தெரிகிறது.

பின்னர் அத்திபட்டி விஏஓ கருப்பையாவை தொடர்பு கொண்டு பேசிய போலீசார், ‘‘மக்களிடம் பெற்ற புகாரின் அடிப்படையில் உங்கள் மீது பிசிஆர் ஆக்ட் படி எப்ஐஆர் பதிவு செய்யலாம். அப்படிச் செய்யாமல் இருக்க ரூ.5 ஆயிரம் கொடுங்கள்’’ என மிரட்டலாக கேட்டுள்ளனர். தொடர்ந்து தற்போது, ‘‘ரூ.20 ஆயிரம் கொடுங்கள். டிஎஸ்பியும், இன்ஸ்பெக்டரும் எப்ஐஆர் போடாமல் வைத்துள்ளனர், குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டால், இந்தப் புகாரை உடனே குளோஸ் செய்து விடுவோம்’’ என்று போலீஸ் தரப்பில் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். பணம் தர தாமதப்படுத்திய நிலையில், போலீசாரே போன் போட்டு, விஏஓவிடம், ‘‘உங்களை டிஎஸ்பி அரெஸ்ட் செய்து அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். எங்கே இருக்கிறீர்கள்?’’ என்றும் மிரட்டி இருக்கின்றனர். இதனால் விஏஓ, ஒரு வக்கீலை போலீசுக்கு தூது விட்டிருக்கிறார்.

 ஆனால் அந்த வக்கீலிடமே, ‘‘ஒழுங்கா ரூ.20 ஆயிரத்தைக் கொடுத்துட்டு கேஸ் இல்லாம போகச் சொல்லுங்க’’ என்று சாப்டூர் போலீசார் கூறி அனுப்பி விட்டார்களாம். இதற்கிடையில் பணம் கேட்ட போலீசின் ஆடியோ பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனாலும் போலீஸ் பணம் வசூலிப்பதில் குறியாய் இருக்கிறதாம். விஏஓவிடம் ‘பணம் கேட்கும்’ போலீசின் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : VAO, Police, Audio Viral, FIR, Madurai
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...