திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கடந்த 4 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திருச்சூர், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 2வது நாளாக நேற்றும் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு அருகே பாலுசேரி பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து கிருஷ்ணன்குட்டி (65) என்பவர் இறந்தார். இதேபோல் மலப்புரம் அருகே தானாளூர் பகுதியில் முஸ்தபா மகன் லதீப் (20) ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.